Thursday, March 26, 2020

ஒரு கோடை விடுமுறையில்



படிச்சு படிச்சு சலிச்சு போச்சு
கண்ணு ரெண்டும் வலிச்சு போச்சு
முழு ஆண்டு பரீட்சை முடிச்ச முத நாலு


விடிய எந்திரிச்சு பேருக்கு பல்லு வெளக்கி
விடிய விடிய கண்ட கனா கண்ணுல நிக்க
அழுக்கான மூஞ்சிய அழுத்தி மட்டும் தொடச்சிக்கிட்டு
ஊற வெச்ச பழைய சோறு
புளிச்சு போன நீர் மோரு
ஊறுகாயின் சாறோட
ஒன்னா ஊத்தி ஒழுக ஒழுக கரைச்சு குடிச்சு

செருப்ப மறந்து ஓட்டம் எடுக்க
தெருவ கடக்க , தோப்ப கடக்க
பள்ளம் மேடு பாக்கல
பாதம் ஒன்னும் வலிக்கல

அடிச்சு புடிச்சு போயி சேந்தா
ஆத்தோரம் கூடிருச்சு அஞ்சாறு உருப்படி

கொண்டு வந்த காசை எல்லாம் கொட்டி பாத்து
எண்ணி முடிக்க கிட்ட கிட்ட வந்துருச்சு ரூவா அஞ்சு

சோள கதிரும் கடலையும்  வாங்க ஒன்னு
கலரும் கிழங்கையும்  கொண்டு வர ரெண்டு
போக , மத்ததெல்லாம் பாறையில் உக்கார
இல்லாத அடுப்ப கல்லால கூட்டி
சொப்புல சோறாக்கி
சொரட்டு ஓட்டுல கொழும்பு வெச்சு
ஆலம் இலையில பந்தி வெக்க
சமைக்காம பசியாற, நட்பால உசுரானோம்

புளியங்காய் உடைக்க கல்லு தேடி ஓட
பாழாபோன முள்ளு ஒன்னு கால குத்த
வலிய பாத்தா பங்கு போகும்னு
ஓடியாந்து வந்து உக்காந்து
உப்பு கல்லு ஒன்னு வெச்சு ,புளிய கொஞ்சம் சேத்து வெச்சு
நாக்குல வச்ச நொடி , காலு வலி மறந்து போச்சு


ஆத்துல காலு முழுக ,பாவாடை பாதி நனைய
ஆளுக்கொரு கிழங்கோட ,பிரியாம சேந்திருக்க
திட்டம் எல்லாம் போட்டோமே
""எல்லாரும் கல்யாணம் செஞ்சிகுருவோமா ?"
புரியாத வயசுல தெரியாம பேச
எது ஒன்னும் வேலைக்கு ஆகாம
நாளைக்கும் யோசிப்போம்னு ,
எதுவாகினும் பிரிய மாட்டோம்னு
ஆத்தையும் மரத்தையும்  சாச்சியாக்கி
உள்ளங்கை அடிச்சு சபதம் எடுத்து

பொழுதுசாய வீட்டுக்கு வர
பாவாடை காஞ்சு போச்சு
மனசு பூரா ஈரமாச்சு

சந்தோசமா தூங்கி போனேன்
எந்திருச்சு பாத்தா வருஷம் பல ஓடி போச்சு

விதி செஞ்ச சதியால
தெசைக்கொண்ணா  பிரிஞ்சு போனோம்


ஆல மரம் செத்து போச்சு
ஆத்து தண்ணி வத்தி போச்சு

உள்ளங்கை சூடும்
முள்ளு குத்தின சுவடும்
மட்டும் , அப்படியே ஒட்டி இருக்கு

கலை அரசி முருகேசன்

No comments: