Thursday, March 26, 2020

அப்பா



நடை வண்டி பழகிய நாள் முதல்
தடை தாண்ட கற்று கொடுத்து
விரல் பிடித்து வீதி கடக்கையில்
மடை திறந்த வெள்ளம் போல்
விடை இல்லா வினாக்களை நான் கேட்க
சிரிக்க சில பொய்களையும்
சிந்திக்க பல மெய்களையும்
கலந்து சமைத்து , சலிப்பின்றி கதைகள்
சொன்ன நாட்கள் வேண்டும்

ஜன்னல் வழி மின்னல் கண்டு
அச்சத்தோடு அழுத பொழுது
“அருகில் நானிருக்க அழுகையேன்”
என்றணைத்து ஆறுதலாய்
பெருகி வழிந்த விழி நீரை
துடைத்த நாட்கள்  வேண்டும்

உடன் பிறந்தோர் என்றும் அம்மாவுடன்
நான் மட்டும்  ஒன்றாய் உங்களுடன் உறங்க ,
உறக்கத்திலும் நெருக்கமானவள் நானே
என்று கர்வம் கொண்டு
கவிதையாய் கழிந்த இரவுகள் வேண்டும்

கவிதை படித்து ரசித்து மகிழவும்
கத்தி பிடித்து கத்திரிக்காய் நறுக்கவும்

துணிகளை கூட திருத்தமாய் துவைக்கவும்
துணிவுடன் துணையின்றி தனியாய் இயங்கவும்
அருவாள் கொண்டு மரத்தை வெட்டவும்
அறிவால் எதையும் எதிர்த்து வெல்லவும்
கற்று கொடுத்த நாட்கள் வேண்டும்

பருவம் வந்த நாள் தொட்டு
சற்றே விலக அம்மா சொல்ல
புரியாமல் பிரிந்த போதும்
பக்குவமான இணக்கத்துடன்
பண்பட்ட அணுக்கத்துடன்
அறிவின் முதிர்ச்சியுடன்
உறவு  பயணித்த
நேர்த்தியான  நாட்கள் வேண்டும்

மாலை சூடி மணம் முடித்து
சேலை நனைய கண்ணீர் சொரிந்து
கணவன் அகம் நோக்கி
பாதை மாறி பயணம் தொடர
துன்பமும் இன்பமும் ஒருசேர
அகம் வாழ்த்த முகம் வாட
“சென்று வா” ,என்று சொன்ன நொடியில்
பெண்ணாய் பிறந்ததை எண்ணி நொந்து
பிரிந்து சென்றேன் என் தந்தையை
கருவறை இல்லாத  இன்னொரு அன்னையை

காலத்தில் தொலைந்த நினைவுகளுடன்

கடற்கரை ஒர நடை பயணம்
கரை புரளும் கண்ணீர் பிரவாகம்



பின்னால் பார்த்தேன்
பாத சுவடு மறைய மறைய
வழியும் கண்ணீர் உறைய  கண்டேன்!!

முதிர்ந்த தந்தைக்கு முற்றாத உறவுக்கு
கவிதையால் ஓர் கண்ணீரஞ்சலி !

No comments: