Tuesday, February 11, 2020

தாய்மையும் தமிழும்

மாலை மல்லிகை வாசம் வீச
மௌனத்தின் அழகில் நாசியுடன் பேச

அந்தி பொழுதின் செந்நிற கதிரும்
சற்றே மறைய இரவும் புலரும்

கனவுகளை கண்ணிலும் கண் காணா கடவுளை கருவிலும் சுமந்த படி நான் ...

உன் பிறப்பை நோக்கி நொடிகள் நகர
என் கருப்பையில் ஒரு கார்கில் போர்

மரண பாதையில்  நினைவுகள் செல்ல
மரிக்கும் நொடியை விதியால் வெல்ல

நான் பிறக்க  நீ  இறப்பதோ என்பது போல்
ஆறுதலாய் ஒரு அழு குரல்.

குரல்  கேட்ட  திசை  நோக்கி
தசை  எல்லாம் பயணிக்க
வழிந்தோட வழியற்று விழிநீர் தத்தளிக்க

தண்ணீர் குடம் உடைத்து நான் வந்தது
உன் தன் கண்ணீர் ஏந்தவே என்பது போல்

என் கண்மணியின் கன்னத்தில்
துளி ஒன்று சிதறி விழ,
என் இடபக்கத்தில் இறைவனை கண்டேன்
உடலுக்கு வெளியே இன்னொரு இதயத்தை கண்டேன்.

அந்த  நொடியில், நோகும் தேகம் சோகம் மறக்க
ஓராயிரம் உணர்வுகள் ...


கொடுங்கோடையில்  முதல் மழை தரும் இன்பமும்
கடுங்குளிர்கால  தேநீர் கோப்பையின்  இதமும்

கடற்கரை அலையின் முதல் ஸ்பரிசத்தில் விளையும் சிலிர்ப்பும்
விடை பெறும் காதலனனின் கடைசி முத்தம் தரும் ஏக்கமும்


அழகு தமிழ் கவிதை வரிகள் தரும் மகிழ்ச்சியும்
அதி காலை ஆலய மணியதன் சாந்தமும்


பெயரில்லா உயிரோவியமாய்
உனை கண்ட அந்த நொடியில் உணர பெற்றேன்.

இதழ் பிளந்து கதை பேச இப்பொழுது வழியில்லை
இருப்பினும் இதயம் பேசும் மொழிகள் இதோ ...

பெண்ணாக்கிய இறைவனுக்கும்
தாயாக்கிய என் தலைவனுக்கும்

இம்மண்ணுலகம் விடுத்து
விண்ணுலகம் அடையும் வரை
எண்ணில் அடங்கா நன்றிகள் பல  .!!!

தமிழகத்தின் ஐம்பெரும் ஆலயங்கள்

தமிழ் மொழியின் அழகும் அடையாளமும் அதன் "ழ"கரம் . அது போல் தமிழகத்தின் அடையாளம் அதன் கோவில்கள் . வியக்கும்  விஞ்ஞானமும் மயக்கும் கலை நயமும் கொண்ட நம் கோவில்கள் நம் முன்னோரின், நம் மூதாதையரின் திறமை பெட்டகங்கள் என்றால் அது மிகையாகாது.  தமிழகத்தின் சிரத்தை அலங்கரிக்கும்  கிரீடமாம் நம் கோவில்களை  பற்றிய ஒரு பார்வை இது.  அந்த கிரீடத்தில் பதிந்துள்ள விலை மதிப்பற்ற மாணிக்கங்கள் போல் சில கோவில்கள் தனி சிறப்பு மிக்கவை.

  தமிழரின் அடையாளமாக கருதப்படும் கலாச்சாரமமும் ,அவர்களது வீரமும், பண்பாடும், வாழ்க்கைமுறையையும் பிரதிபலிக்கும் பிம்பங்களாகவே கோயில்கள் விளங்கின.  இக்காலம் போல் கோவில் பக்திமான்கள் மட்டும் செல்லும் ஒரு வழிபாட்டு நிலையமாக விளங்கியதில்லை, கோயில்கள் ஏழைக்கும் எளியவர்க்கும் உணவும் நீரும் வழங்கும் ஒரு தர்ம சத்திரமாக, போர் காலங்களில் அவசர தேவைக்கான உணவு தானியங்களையும் , பொற்காசுகளையும் பதுக்கி வைக்கும் பேழைகளாகவும், போர் ஆயுதங்கள் பட்டை தீட்டி பத்திரமாக பாதுகாக்கப்படும் பட்டறைகளாகவும் விளங்கின. இதன் காரணத்தால் தான் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் கட்டப்பட்ட அணைத்து கோவில்களுக்கும் அரண்மனைகளும் சுரங்கப்பாதை ஒன்று அமைக்க பட்டு இருந்தது.  இவ்வளவு முக்கியத்துவத்துடன் கட்டப்பட்ட கோவில்களில்  சில அற்புதமான கலை நயத்துடனும் அழகுடனும் வடிவமைக்க பட்டன. அவ்வகையில் தமிழகத்தின் கவனிக்க பட வேண்டிய ஐந்து  கோவில்களின் வரலாற்று சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.


ப்ரஹதீஸ்வரர் கோவில், தஞ்சை



ராஜ ராஜ சோழனால் சைவ மதம் தழைத்தோங்கிய காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்ப பட்ட கோவில் தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ப்ரஹதீஸ்வரர் கோவில். தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் சோழ மன்னர்களின் கட்டிடக்கலை தனி சிறப்பு வாய்ந்தது. சோழரின் புகழையும் பெருமையையும் தனித்துவத்தையும் சமகால மக்களிடம் சேர்த்த பெருமை மதிப்பிற்குரிய  அய்யா கல்கி அவர்களையே சாரும். பொன்னியின் செல்வனையும் ,பார்த்திபன் கனவையும் படித்தவர்கள் யாராயினும் "நாம் அக்காலத்தில் பிறந்திருக்க கூடாதா"?" என்ற ஏக்கத்தை நிச்சயம் கடந்து சென்றிருப்பர். அப்பேற்பட்ட புகழ் கொண்ட சோழ குல மன்னனாம் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். உலகிலேயே சன்னிதானத்தில் மிக பெரிய சிவன் சிலை கொண்ட கோவில் என்ற சிறப்பு இதற்கு உண்டு.


Tourmyindia.com
உலக வரலாற்று சின்னமாக விளங்கும் இக்கோவிலின் நிழல் தரையில் விழாது என்கிற நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அழைக்கப்பட்டது. சரித்திரத்திலும், தமிழனின் வளமான வாழ்க்கை முறையையும் அறிய விழையும் ஒவ்வொருவராலும் ரசிக்க பட வேண்டிய ஒரு வரலாற்று சின்னம் நம் தஞ்சை பெரிய கோவில்.

மீனாட்சி  சுந்தரேஸ்வரர்  கோவில், மதுரை





Gettyimages.com

மணக்கும் மல்லிகை வாசமும், மயக்கும் மொழி வளமும் கொண்ட மதுரை மண்ணில் உருவாக்கப்பட்ட அழகிய கோவில் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் அது மிகை ஆகாது. கோவில் எவரால் உருவாக்கப்பட்டது என்பதற்கு பல காரணங்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அழகிய சிற்ப வேலை பாடுகளுடன் காணப்படும் இக்கோவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் கொண்டது. இத்தலத்தின் முக்கிய கடவுள்களாக  சிவனும் மீனாட்ஷி அம்மனும் விளங்குகிறாள்கள் . இக்கோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் தனி சிறப்பு வாய்ந்தது. மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களை எந்த கோணத்தில்  நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காணப்படுவது வியப்பானது. மதுரை செல்லும் யாவரும் மொழி இன வேறுபாடின்றி ரசிக்க வேண்டிய அழகிய நிலையம் மீனாட்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

ஸ்ரீ ரங்கநாதர் கோவில் , ஸ்ரீரங்கம்




Thehindu.com


வைஷ்ணவ ஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.  ஆழ்வார்கள் பாடிய நான்காயிரம்  திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற இக்கோவிலின் மூலவர் சயனிக்கும் வடிவில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் ஆவார். வைஷ்ணவ மதத்தினரால்  போற்ற படும் 108  திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஸ்ரீரங்கத்தின் இந்த ஆலயம் ஆகும்.

கோவிலை சுற்றி ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு மதில் சுவர்கள் அமைந்துள்ளன. இவ்வேழு மதில் சுவர்களும் ஏழு உலகங்களாக கருதப்படுகிறது. சோழ மன்னர்களாலும், பாண்டியர்களால்,ஹொய்சலயர்களும் கொடைகள் பல வழங்கப்பட்டு , பேண பட்ட இக்கோவில் ஆழவார்களால் மிகுதியாக பாட பட்ட ஒன்றாகும். வளமான வரலாறும், அழகான கட்டமைப்பும் கொண்ட இந்த புனித ஸ்தலம் கட்டாயம் பார்த்து ரசித்து வியக்க வேண்டிய ஒரு இடமாகிறது.

ராமநாதன் ஸ்வாமி கோவில், ராமேஸ்வரம்

கடல் அலைகள் கவி பாட கரையோரம் அழகாய் அமைந்திருப்பது, ராமநாதபுர மாவட்டம், ராமேஸ்வரத்தின் ராமநாத ஸ்வாமி கோவில். இரு பெரும் இந்து புராணங்களுள் ஒன்றான ராமாயணத்தின் நாயகனான ராமன் , போரில் செய்த பாவங்கள் அகல சிவனை வேண்ட எண்ணி சிருஷ்டிக்கப்பட்ட லிங்கம் தான இது என்று தல வரலாறு கூறுகிறது.



wikipedia










உலகிலியே நீளமான பிரகாரங்கள் உள்ள கோவிலாக இது விளங்குகிறது. எனினும் 690 அடி நீளமும் 435 அடி அகலமும் 1212 தூண்களுடனும் காட்சி அளிக்கும் மூன்றாம் பிரகாரம் தனி பிரசித்தி பெற்றதாகும்.  இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாக இருப்பது இக்கோவிலின் மற்றும் ஒரு சிறப்பாகும். இத்தகைய பெருமைக்குரிய அம்சங்கள் கொண்ட ஆலயம் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பது வியப்பில்லைதானே ?

குமரி அம்மன் கோவில், கன்னியாகுமரி

முப்பெருங்கடல்கள் சங்கமிக்கும் , இந்திய தீபகற்பத்தின் அணையா விளக்காய் விளங்கும்  கன்னி தெய்வமாம் குமரி அம்மன் வீற்றிருக்கும் அழகிய கோவில் தான் குமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குமரி அம்மன் கோவில். சிவ பெருமானை மணக்க எண்ணி ஆவலுடன் காத்திருக்க, அது நடவாமல் போக, கன்னியாகவே  இருந்து விடும் முடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்தாள் கன்னி அம்மன் என்று  வரலாற்று சுவடுகள் விளக்குகின்றன.




Onlinekanyakumari.com

தேவியின் பாத வடிவில் அமைந்துள்ள பாறையின் மீது சுவாமி விவேகானந்தர் ஞானோதயம் பெற்றமையால் அப்பாறை விவேகானந்தர் பாறை என்றும் அழைக்க படுகிறது.  மேற்கூறிய காரணங்களால் தமிழகத்தின் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக இது இடம் பெறுகிறது.



நம் பழம் பெரும் கோவில்கள் , நம் முன்னோர்களின் கல்வி, வாழ்க்கை முறை, ஒழுக்கம், மொழி பற்று , கலாச்சாரம் போன்ற பண் முகங்களை அறிந்து கொள்வதற்கான எளிதான வழியாகும். தெய்வ வழிபாட்டை கடந்து சரித்திரத்தில் நீங்கா  இடம் பிடித்த நம் முன்னோரை போற்றுவோம், அவர்தம் உருவாக்கிய பொக்கிஷங்களை பாதுகாப்போம்.

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்

இந்தியாவின் பல நகரங்கள் அதி வேக நாகரீக வளர்ச்சியினாலும் மேற்கத்திய பழக்க வழக்கங்களினாலும் அசுர வேகத்தில் முன்னேறி வந்தாலும், அதன் உயிர் நாடி பசுமையும் , பாசமும், அழகும் , ஆழமும் சுரக்கும் அதன் கிராமங்களிலே உள்ளது.

கிராம வாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் தான். பெரு நிறுவன வருகையினால், பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியினாலும் சிறு முதல் பெரு விவசாயிகளின் வியாபார முறைக்கான நியதிகள் முற்றிலுமாக மாற்றி அமைக்க பட்டுள்ளன. விளைவாக மண்ணை கிண்டி வாழும் மக்களின் உணவில் மண் விழுந்தது. ஏனோ விவசாயமும், அதை சார்ந்த வியாபாரங்களும் வருங்கால சந்ததியரின் வாழ்வு  மேம்பட உகந்ததாக இருக்காது என்ற நம்பிக்கை வலுக்க ,கிராமங்களில் இருந்து மக்கள் ஆண் பெண் வேறுபாடின்றி கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். வளர்ந்து வரும் விஞானமும், தகவல் தொழில் நுட்பமும் எளிதாக பொருளீட்டும் தன்மை வாய்ந்த வேலை வாய்ப்புகளும் காந்தம் போல் கிராம மக்களை ஈர்க்கின்ற சில காரணங்கள்.

பரந்து விரிந்த ஆலமரத்தின் உறுதி அதன் விழுதுகள் என்றாலும், ஆதாரம் அதன் வேரல்லவா ? அப்படி பட்ட வேரானது விவசாயம்.  அவ்விவசாயம் தழைத்தோங்கும் நம் அழகிய கிராமங்களில் ஒரு நாள் செலவழித்து நாம் ஈட்டிய வரவை நோக்கும் முயற்சியாகும் இப்பதிவு.

ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்வின் இன்றியமையாத தேவைகள் தான் என்ன ?? நம் நகரவாசிகளிடம் இக்கேள்வி முன் வைக்க பட்டால், "பேஸ்புக் ", "வாட்ஸாப்ப்", "ஸ்விக்கி",மற்றும் இன்ன பல ஆப்புகளின் பெயர்கள் பதிலாக  வந்தாலும் வரலாம். நாம் நிஜ தேவைகளை பற்றி அறிவோம். உண்ண உணவு, முக்கியமாக ஆரோக்கியமான, கலப்படமற்ற உணவு,சுவாசிக்க தூய்மையான காற்று, உடுத்த உடை, உறங்கவும், புழங்கவும் பாதுகாப்பான, சுகாதாரமான இடம்.

இதையெல்லாம் உணரும் இடம் ஒரு கிராமமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டு, சூரிய கீற்று மலை வழியாகவும், கிளை வழியாகவும் நம் முகத்தை வந்தடைய ஓர் அதிகாலை வேலையில் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பிரவேசிப்போம்

பத்து வருடத்திற்கு முன்பு ஒரு கிராமத்துக்குள் நுழைந்தால் ஏற்படும் அனுபவத்தை போல் இது இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. நாகரீகத்தின் தாக்கம் அங்கும் இங்கும் தென்படவே செய்கிறது. ஆங்காங்கே ஸ்மார்ட் போன் வைத்து கொண்டு உலகையும் தன்னையும் மறந்து அமர்ந்திருக்கும் இளைஞ்சர்கள், கிராம மக்கள் தொகையின் தேவைக்கு அதிகமான இரு சக்கர வாகனங்கள்,வீதிக்கு ஒரு நான்கு சக்கர வாகனம், லேப்டாப், ஸ்மார்ட் போன்,ஏ சி போன்ற எந்திரங்களை விற்கும் கடைகள்  என நவீன வாழ்க்கை முறையின் சுவடுகள் தெரிகின்றன. இருப்பினும் சாணம் கரைத்த நீரை தெளித்து பாவாடை தாவணி அணிந்த பதினெட்டுகள் அரிசிமாவால் வீட்டு  வாசலில் கோலமிடும் காட்சி, " அம்மா பால் " என்று ஆழாக்கு ஏந்திய படி வீட்டின் முன் நிற்கும் பால் காரன், பம்பரம், கோலி , காத்தாடி போன்ற நகர் புறங்களில் காணக்கிடைக்காத விளையாட்டுகளில் மூழ்கி இருந்த சிறார்கள்,
கொடியில் பறித்த முல்லையை கூடையில் சுமந்து கொண்டு,தன் காட்டில் விளைந்த கத்திரியையும்,முருங்கையையும் மூட்டை கட்டிக்கொண்டு " என்னம்மா , இன்னைக்கு முருங்கக்கா கொழம்பு வைக்க கூடாதா ?"என்று உரிமையோடு கேட்கும் கறிகாய் விற்கும் பெண்ணின் தொனியும்
ஒரு கிராமத்துக்கே உரித்தான அடையாளங்களாக தென்பட்டது.




சிறிய குடிசையோ, பெரிய மாடிகளோ தனி தனியாக சாலையின் இரு புறமும் வரிசை கட்டி கொண்டு நின்றன. நல்ல வேலையாக அடுக்கு மாடி குடியிருப்புகளால் இன்னும் ஆக்கிரமிக்க பட வில்லை நம் கிராமங்கள்.

புதியவர்களை கண்டால், வியப்புடன் நோக்கும் கண்களே மிகுதியாகவும், சந்தேகத்துடன் நோக்கும் கண்கள் குறைவாகவும் காணப்படுவது கிராமங்களில் தான். அந்நியர்கள் என்றல் கதவு சங்கிலியின் பின்னால் இருந்து அணுகும் போக்கிற்கு மாறாக ,  என்ன யாரென்று விசாரித்து திண்ணையில் அமர வைத்து மோரும் நீரும் தரும் பங்கு நெஞ்சை தொடுகிறது.

"ஆல் ரோட்டஸ் லீட்  டு ரோம்" என்று ஆங்கில பழ மொழிக்கு ஒப்பாக, ஒரு கிராமத்தின் எந்த சாலையில் சென்றாலும் ,நம் பயணம் முடியும் இடம் ஒரு தோப்பாகவோ, வயல் வெளியாகவோ, அல்லது காடாகவோ தான் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி ஒரு பயணத்தில் சாலையின் இரு புறங்களிலும் வெவ்வேறு வகுப்பு மக்களுக்கான உணவு விடுதிகள் தென் படுகின்றன.


Flickr.com
வணிக வர்த்தக காரணங்களால் பிளாஸ்டிக் மயமாக்கப்பட்ட நம் நகர்ப்புற உணவு விடுதிகளில் இருந்து வெளிப்படையாக மாறுபடுவது, எங்கு நுழைந்தாலும் பளிச்சென்று நம் கண்களில் படும்  பசுமையான வாழை இலைகள்.  உள்ளூர் சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூல பொருட்கள் தான் பயன் படுத்த படுகிறது என்ற காரணத்தால் கலப்பட உணவின் சதவிகிதமும் , நிகழ்தகவும் குறைவு.

மாலை புலர, சூரியன் மறைய, கிளைகளும் இலைகளும் சாமரம் வீச சில்லென்ற  காற்று உள் கூட்டை அடைய இனிதாய் நிறைவை நோக்கி நம் பயணம். 
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் கொட்டி கிடப்பது போன்று, மின்சார விளக்குகள் பரவி இருக்கும் நகரங்களை போல் அல்ல கிராம இரவு. உழைத்த கூட்டம் களைப்பாற ,கால் நடைகள் இளைப்பாற , பொழுதுசாய உணவு முடித்து அரவம் ஏதும் இன்றி அடங்கி போகிறது பாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகை.

தமிழகத்தில் மட்டும் எண்ணிலடங்கா அழகிய கிராமங்கள் அரியலூர், கோயமுத்தூர், நெல்லை, கடலூர், தஞ்சை இன்ன பிற மாவட்டங்களிலும் இயற்கை அன்னையின் வரம் பெற்று வளமாக வாழ்கின்றன. அவ்வளங்கள் செழிக்க தழைக்க உதவ இயல வில்லை எனினும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு துணை போக வேண்டாம்.
ஆயிரம் கோடி பணம் பையில் இருந்தாலும், பசியாற நெல்மணி வேண்டும் என்னும் வாழ்வியல் எதார்த்தத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுவோம்.

நம் கிராமங்கள் வளர, செழிக்க, கிராம மக்களின் வாழ்வு  வளம் பெற  நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்வோம் என சபதம் பூணுவோம்.

Read your way to glory




    A couple of decades ago, one fine day, when we  as a family set out to clear up a dilapidated store room in our ancestral home, did I find a wooden trunk in a corner.  Filled with curiosity and at the same time the fear of confronting lizards, asked Appa to open it. I was dumb struck to find the whole trunk full of books. Stacks of books that were hand bound with pages gathered meticulously from weekly, monthly magazines over years.  The aroma of old vintage paper filled the room and my mind with equal intensity.  Learnt later that,  the treasure trunk was the result of unrelenting efforts put in by an aunt for the love of reading.

A very casual reader that I was  until then, was totally taken aback by the patience and effort someone could put in for the sheer passion of reading.  My inquisitiveness got the better off me and I started  flipping through a few pages of almost all the books.  Those few hours I spent in that room were indeed life changing.  Appa asked me “Why don’t you take up reading seriously?” and I did.

 Gradually, over the years, I realized that reading with passion is altogether a refreshing experience. It is a self sculpting art. Books open up the doors to a whole new world, new experience and can be extremely rejuvenating.
It dawned on me that there can be no best friends like a good book. One can become totally oblivious to the external world, when involved in a conversation with the author of the moment.  It’s an intense mental conversation between two people, the author and the reader. Some books give you a lot of strength, some happiness, some make you ponder, some leave you devastated, some change your thought process. Some books can be so impactful that it changes the way you live.
     The whole experience of reading a book can be compared to visiting a crowd free temple, pray your mind out and return with an uplifted, clearer and a saner mind. Opening a book is synonymous  with entering a  temple. As you flip through the pages, you realize that it works like a therapy, making you forget your worries, transporting you to a different world .  Every book leaves an imprint making one mentally richer.
I would be eternally thankful to that unseen aunt of mine who sowed the seeds of knowledge deep inside me, for I would not be here writing this piece of article for a book that has enriched my life in more ways than one.
      And now, to all those who haven’t started yet, “Why don’t you take up reading seriously”?