Monday, December 13, 2021

திறவுகோல்

 

ஈராறு உயிரில்லாது மூவாறு மெய்க்கு பொருளேது

அறிவோம் நாம் !!

 

பாரார் பாடும் பாரதியும் ஊரார் போற்றும்  நம்  நடுவரும்

நாமாறு பேரும் இல்லாது

இம்ம் மெய் நிகர் மேடைக்கு பொருளில்லை என்பேன் நான்

 

தமிழ் பால் நீங்கா  காதல் கொண்ட கவிஞர்களுக்கும்

தமிழே காதல் கொண்ட நம் நடுவர் திரு அப்துல் காதர் அய்யா 

அவர்களுக்கும் வந்தனங்கள்!

என் தாலும் கோலும் களவி கொள்ள perum காரணமானவன்

கண்ணம்மாவின் கண்ணாளனை

எண்ணாது முடியாது இம்முன்னுரை 

 

தமிழறிவை வரவாக்கி மணித்துளியை செலவாக்கி

கற்பனை கற்களால் கட்டிய என் கவிக்கோவிலுக்கு  இன்று திறப்பு விழா

 

இதோ திறவு கோலை

தலைமையிடம்  தருகிறேன்

வீடுகளும் நாடுகளும் தாழிட்டு இருக்க

திறவுகொலென்னும் தலைப்பில் கவிதை

திறக்க மறுத்து சிரிக்கிறது என்னுடன் சேர்ந்து என் எழுது கோல்

அத்தாழ்களை இல்லையென்றாலும் 

இத்திறவுகோல் தம் இதய தாழ்களை திறந்து

ரத்த நாளங்களுக்கு புத்துயிர் தரும்

என்ற நம்பிக்கையுடன் இதோ நான் !!

 

முத்துக்களாய் நீரது மண்ணில் சிந்த மூடிய முகில்களை திறப்பது  யார்

கொத்து மல்லிகை மனம்   வீச குவிந்த மொட்டுக்களை திறப்பது யார்

புத்தம் புது புல்லொன்று புவி காண  புதைந்த விதையை திறப்பது  யார்

செத்து பிழைத்து ஈன்ற சேயது அழ  தாயாவளின் முலைகளை  திறப்பது  யார்

நித்தம்  சென்றுவரும் சுவாசம் மொத்தமாய் செல்லும் நொடி உயிர்க்கூட்டை திறப்பது யார்

முந்திச்சென்ற விந்து வாசல் வந்து நிற்க கருப்பை கதவை திறப்பது யார்

கெட்டியான இருட்டும் சட்டென்று அகல அக கண்களை திறப்பது யார்

மனமது மகிழும் பொழுதும் நெகிழும் பொழுதும் கண்ணீர் குடங்களை திறப்பது யார்

கடும் பாறையதன் தேகத்தை சிறுவேறொன்று துளைக்கிறது

சுடும் சூரியனின் கதிரது பெரும் சமுத்திரத்தை கிழிக்கிறது

கண்ணில் தெரியாத வைரஸ் தேகம் துளைப்பதால்

இன்று விண்ணில் பறந்த  விமானங்கள்  நின்று போனது

 

Omicron உட்பட திறவுகோலன்றி திறம்பட  திறக்கும் தாழ்கள் 

விஞானத்திற்கும் விளங்காத விந்தைகள்.

எனில் திறவுகோளென்ன  திறனற்றதா  ?

ஐயோ

இதென்ன என் தலைப்பிற்கு வந்த சோதனை

கலையால் கவியரங்கம் கலை இழப்பதோ

மூளை மடிப்புகளை முழுதாய் திறந்து

சற்று சிந்தித்து பார்த்து

சத்தியம் விளங்க பெற்றேன்

 

படைத்தவன் புலப்படாதல் படைப்புகள் பொய்யாவதில்லை

இறைவன் அகப்படாததால்  அவன் இருப்பு இல்லாமலில்லை

முன்நிகழ்வின்  முடிவது இந்நிகழ்வின் திறவுகோல் 

என்ற உண்மை தெளிய பெற்றேன் 

நேற்றென்பது இன்றைய திறவுகோல்

இன்றென்பது நாளைய திறவுகோல்

 

பல் இலக்கியங்களுக்கு நல் இலக்கணம் திறவு கோல்

ஏகாந்தத்தின் அமைதி தத்துவங்களின் திறவு கோல்

நிறைவற்ற மனம் பேராசையின் திறவுகோல்

விடியும்  முன் காணும் கனவுகள் பல விடியல்களின் திறவுகோல்

கொடும் பகைக்கு கடும் அறியாமை திறவுகோல்

இருப்பவனின்  அகந்தைக்கு இல்லாதவனின் இயலாமை திறவுகோல்

நீ புனையும் பொருளுரை மூப்பில் உன்  முடிவுரைக்கு திறவுகோல்

ஆண்மையது பெண்மையின் திறவுகோல்

ஆன்மாவது உண்மையின் திறவுகோல்

பூட்டியிருப்பவைக்கு விடுதலை திறவுகோல்

விடுப்பட்டவைக்கு பூட்டல்லவோ திறவுகோல்

 

இயற்க்கை இதனை இயல்பாய் இயக்க

செயற்கை சிறைகள் ஏன் ??

உடைக்க பட வேண்டிய கதவுகளும்

உதைக்க பட வேண்டிய கதவுகளும்

உருமாறி உலவிக்கொண்டிருக்க


சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி,

பாம்பின் நிறமொரு குட்டி,

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

 

எட்டயபுரத்தானின் எண்ணங்களை

கட்டிபிடிக்கவில்லை என்றாலும் எட்டி பிடிக்க முயல்வோம்  !!

 

பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவனை

அச்சம்தனை துச்சமாய் எண்ணியவனை எண்ணத்தில் பூட்டுவோம்

சாதிசிறையில் அடைந்திருக்கும் சிந்தையை

பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுப்போம்

 

மதசங்கிலியால் பூட்டிக்கிடக்கும் மனக்கதவுகளை மனிதமென்னும் திறவுகோல் திறக்கட்டும்

சமய  சணலால் கட்டுண்டு கிடக்கும் சித்தத்தை சமத்துவமென்னும்

திறவுகோல் திறக்கட்டும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி!


 

Wednesday, November 24, 2021

காதலனின் மனைவிக்கு....காதலியின் கடிதம்

 

உன் அடுக்களை பானையில்

என் உலை கொதிக்காதோ

 

 உன் மாடி தோட்டத்தில்

என் மல்லிகை மலராதோ

 

 உன் வீட்டு வாசத்தில்

என்  சுவாசம் சேராதோ

 

 உன் தலையணை மடிப்பில்

எந்தன் மயிரிழை இழையாதோ

 

 உன் விடியாத இரவுகள்

என் நாணம் காணோதோ

 

 உன் தாய்மையின் பாரம்

என் மடி உணராதோ

 

 உன் மங்கள திலகம்

என் நெற்றி சேராதோ

 

 என்னவன் என்றெண்ணியவனை

தன்னவனாய் கொண்டவளே

பெண்ணிவளின் நோவதனை

நீயறிய நியாயமில்லை..

 

 பிரிந்து போன பின்னாலும்

பின்னி கிடக்கும் நினைவுகள்

கலைந்து விட்ட பின்னாலும்

கண்ணில் நிற்கும் கனவுகள்

விலகி விட்ட பின்னாலும்

அகல மறுக்கும் ஏக்கங்கள்

 

விழி நான்கும் கண்ட ஒற்றை கனா

தடம்  மாறி போன பின்

விரல் கோர்த்து பேசிய காதல் மொழி

கானலென ஆன பின்

கற்பனை செய்து காயம் ஆற்றி கொள்கிறேன் .

என் காதலனை உன் கணவனாக்கிய

 

காலத்தை நொந்து கொள்கிறேன்

தொடங்கிய கவிதை முடிவதற்குள்

தொலைந்து போனது என் பேனா

முடியாத என் கவிதையை

விடியாத இரவுகளுக்கு பரிசாக்கி விட்டேன்

 

கால சுழற்சியில் வாழ்க்கை பழகி கொண்டேன்

இரவுக்கும் பகலுக்கும் இடையில் என் காதல் மறைக்க கற்றேன்

 

 என் முன்னால் காதலனை

இந்நாள் கணவனாய் கொண்டவளே,

 

நானறிந்த உன்னவனை

நீயறிய வழியில்லை

 

நீயறிந்த என்னவனை

நானறியாமல்  பார்த்துக்கொள்

திருமண பரிசாய்

திரும்ப தருகிறேன்

என் காதலை.

தாரைவார்த்தவனுடன்  தாராளமாய் வாழ்ந்து விட்டு போ !

Wednesday, November 17, 2021

சரித்திர தேர்ச்சி கொள்


எச்சமயமும் மரணம் என்ற நிச்சயமற்றப்பயணத்தில் 

முடிவொன்றை இருப்பதை மறந்து  முடிவில்லா தேடல்கள்

 

மனிதா

சரித்திரத்தை சரியாய் அறிந்திருந்தால்

சரியாய் தவறுகள் செய்யமாட்டாய் .

வரலாற்று கல்லறைகள் சொல்லும் பாடம் கற்றால்

பொருளற்று போகாமல் இருக்கும் வாழ்க்கை பயணம்.

வரலாறு காணாத என்று சொல்வதை நிறுத்தி

வரலாற்றை நீ காண பயிற்சி கொள்.

 

சரிந்த சாம்பிராஜ்யங்கள் எல்லாம்

சரித்திரத்தை சரியாய் அறியாதவை.

பிண்ட பேதங்கள் கொண்டு அண்டம் ஆண்டவர்

வென்றதில்லை என்றும்

திண்ணமாய் சொல்லும் சென்றகாலம்

 

சலனிமில்லாமல் சற்றே சிந்தித்து பார்

சரித்திரம் சொல்லும் சத்தியம் விளங்கும்

கண் காணா துளியில் இருந்து உதித்தவன் நீ

கால சுழற்சியில் காணாமல் போகும் துரும்பு நீ

புனைந்த  பொருளுரை  பொருளற்று போனதை

மூப்பில் முடிவுரை வரையும் வரை அறியா

தவறை செய்யாதிரு .

மூளை மடிப்புகளுக்கெட்டாத ஆச்சர்யங்கள்

மனித நாகரீகங்களின் மடியில் மறைந்து இருக்கின்றன

கற்பனைக்கெட்டாத கருத்து கருவூலங்கள்

வரலாற்று புரட்சிகளுக்கடியில் புதைந்து கிடக்கின்றன

 

நேற்றிடத்தில் விதை வாங்கி

இன்றைய வெற்றிடத்தில் புதை

விளையும் நாளை போற்றிடும் உன்னை.

 

மனிதத்தை மறக்க செய்யும் மரபுகள் மற

சமத்துவம் துறக்க துணியும்  சட்டங்களை சாடு

பழுதான எண்ணங்களுக்கு  பழைய  வரலாற்று பக்கங்களில் பதில் தேடு 

சிதறிய சிந்தையை சரித்திர கோலால் சீர் செய் 

நெறிமுறைகள் பழக வரையறைகள் தேவை இல்லை

 

 

முழு மதி தேய்வதும் பிறைநிலா வளர்வதும்

இயற்கை சொல்லும் பாடம்

வாழ்ந்தவர் வீழ்வதும் தாழ்ந்தவர் எழுவதும்

வரலாறு சொல்லும் வேதம்

 

ஊனது மண்ணுக்கிரையாகும்  வரை

உனது எண்ணம் கோணாதிரு

சரித்திரமாய் நீ  வாழ்ந்து விட்டால்

பின் உன்னை தேர்ச்சி கொள்ளும் உயிர்கள்

மண்ணில் தானாய் முளைக்கும்

 

Thursday, July 8, 2021

வாழ்வியல் சொல்லும் விழாக்கள்

 

கொளுத்தும் வெயிலில் கோடை மழை போல

வற்றி போன குளத்தில் ஒற்றை தாமரை போல

இறுக்கமான சூழலில் அமைந்த இந்த கவி அரங்கின் மூலம்

 

நைந்து கிடக்கும் நம்பிக்கை நறும்புகளில்

நற்றமிழ் பாய்ச்சி புத்துயிர் தருவோம்

களைத்து கிடக்கும் இதய நாளங்களை

கவிதை சொல்லி இளைப்பாற அழைப்போம் .

 

தாளும் கோலும் களவி கொண்டதால்

பிறந்த என் கவிதை குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா

---------------------

 

இயல் இசை நாடகம் - முத்தமிழை போற்றும் எம்

விழாக்களை பற்றி எத்தனை முறை சொன்னாலும் தெவிட்டாது .

 

சந்தோஷத்திற்கு விழா சங்கடத்துக்கு விழா

பக்திக்கு விழா பயத்துக்கும் விழா

உழவுக்கு விழா எழவுக்கும் விழா

சாமிக்கு விழா சவத்துக்கும் விழா

நாங்கள் வித விதமாய் விழா  வித்தை அது

விடிய விடிய சொன்னாலும் முடியாது

 

 கத்திரி வெயில் சித்திரையோடு முடிய

 வரமொன்று  வழங்க வைகாசி விடிய

 விசாகம் வந்தது விஷேஷமல்ல

 அழகான வேலவன் , தமிழ்க்குடியின் மூலவன்

 முருகனவன் பிறந்தது முத்தாய்ப்பானது

 வீரவேலவனை போற்றும் விஷேஷ விழா , விசாக திருவிழா

 

விண்ணில் முட்டிக்கொண்ட மேகங்கள்

மண்ணில் இட்டுக்கட்டி மெட்டு போட

விதைத்த நிலம் விளைந்து நிற்க

உழைத்த களைப்பு களைந்து போக

கண்டாங்கி சேலையும் கண்ணாடி வளவியும்

கும்மிக்கும் குலவிக்கும் ஒன்று கூடி

இல்லாத அடுப்பை கல்லால் கூட்டி ,

உலை கொதிக்க

கலை கட்டும் எங்கள் உழவுதிருவிழா

 

வேலிக்குள் ஜல்லிக்கட்டு காளையது  சீறி பாய்ந்து தேகம் கிழிக்க

வேல் விழியாள் வெளியில் இருந்து அதை சேர்த்து தைக்க

அடங்க மறுப்பது காளையா ? என் காதலா ?

தைப்பது நீ என்றால் நான் சல்லி சல்லியாய்

போகும் வரை தொடரட்டும் இந்த ஜல்லி கட்டு

ஏங்கும் எங்கள் காளையரின் வீரத்தையும்

காளைகளின் வீரியத்தையும் சொல்லும்

இந்த மாட்டு விழா எங்கள் வீட்டு விழா

 

 

மழையால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர

அகநானூறு போற்றும் அகல் விழா

இன்றும் வழக்கில் இருக்கும் விளக்கு  விழா

என்ன தான் தேய்த்து தீர்த்தாலும்

சட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும்

கெட்டியான  மீன் வாசம் போல ,

வீறு கொண்டு  எழுந்த கார் மேகம் எல்லாம்

ஒன்று கூடி ஒப்பாரி வைத்து சோதித்தாலும்

சாதித்து நிற்கும் இந்த  கார்த்திகை ஜோதிகள்

 

ஈராறு மாதங்களை  மட்டுமல்ல

ஊராரும் உறவாறும் சேர்ந்து

உறவின் வரவை , வரவின்  உறவை

பிரிவில் துணிவை, துணிவின் பிரிவை

அழுத்திச்சொல்லும்

அறைந்து சொல்லும்

 அர்த்தமுள்ள விழாக்கள் , எங்கள் குடும்ப விழாக்கள் 

 

பூப்படைந்த புது மகளுக்கு

மாமன் நடத்தும் மஞ்சள் விழா

ஊரும் உறவும் ஒன்று கூடும்

திருமணம் என்னும் பெருவிழா

எத்துனை  துயரிலும்

புத்துயிரொன்றை பத்து திங்கள்

சுமப்பவளுக்கு சீமந்த விழா

ஓட்டை போட்டால் நிரம்பும்

குடமுண்டோ

தமையனின் மடியில் அமர்ந்த

தனயனின் காதுகள் துளைக்க

நிரம்பும் பெற்றவளின்  உள்ள குடம்.

காதணி விழாவிற்கு இம்மேதினியில் ஈடுண்டோ

அழகென்ற சொல்லுக்கு முருகன், அறிவோம் நாம்

அமைதி என்ற சொல்லுக்குum முகமுண்டு என்பேன் நான்

பாதியில் மாறிய பாதை ,போதியில் முடிய

பாருக்கு புது பாடம் சொன்னவன் புத்தன்.

அக்கருணை முகத்தை ஓரப்பார்வை

பார்த்தாலும் ஒட்டிக்கொள்ளும் அமைதி

புத்தர் பிறந்த வைகாசி

இத்துயருக்கு முடிவாய் இருக்கட்டும்

 

இறுதியாய்

உள்ள பள்ளங்களை உவகையால்

நிரப்பும் விழாக்கள் பழகுவோம்

சாதி மறந்து சமத்துவம் பழகும் விழாக்கள்

மதம் மறந்து மனிதம் பழகும் விழாக்கள்

பிரிவினை மறந்து பரிவினை பழகும் விழாக்கள்

 

மனிதம் என்னும் மையால் ,  எண்ண தூரிகை வண்ணம் கொண்டால்

வாழ்க்கை காகிதம் வானவில் ஆகும் ... இந்நாள் போல் ...எந்நாளும் திருவிழா காணும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி !