Sunday, February 25, 2024

 

கார்மேகம் கண்ணீர் வடிக்கிறது

 

கருவானவள்  உயிரானேன் ; களிப்படைந்தர்.

உயிரானவள் உருப்பெற்றேன் ; உற்சாகமடைந்தர்

உருப்பெற்றவள் உலகம் காண வந்தேன் .

 

"மகளே வா! மஹால்டஷுமியே  வா!“ உள்ளிருக்கும் போது அழைத்தவர்

வெளிவந்ததும்

"வந்ததும் வந்தாய் வெள்ளையாய் வந்திருக்க கூடாதா ? "என்றர்.

மீண்டும் உள் சென்று விட வேண்டும் போலிருந்தது எனக்கு.

 

"கருப்பாய் இருந்தாலும் என் மகள் கலையாய் இருக்கிறாள்"

அம்மா எனக்கு ஆறுதல் சொன்னாளா

தனக்கு சொல்லிக்கொண்டாளா

இன்று வரை விளங்க வில்லை எனக்கு.

 

இதையும் அதையும் தேய்த்தால் நிறம் வரும்

வந்தவர் போனவர் எல்லாம் சொல்ல

குறையுள்ள குழந்தையை பெற்றது போல் குமுறினாள் அம்மா.

பிழையுடன் பிறந்ததாய்  நம்பினேன்.

கருப்பை கரைக்கும் சக்தி  மட்டும்  கண்ணீருக்கு  இருந்திருந்தால்

என் கன்னங்கள் இரண்டும்  செங்கிண்ணங்கள்   ஆகி இருக்கும்

நான் சிந்திய கண்ணீருக்கு.

 

நிழல் கருப்பாய் இருப்பது நிஜம்

நிஜம் கருப்பாய் இருந்தால் நிழல் கூட துணை நிற்பதில்லை

என்று கால போக்கில் கற்றுக்கொண்டேன்

 

பள்ளி விழா நாடகமொன்றில் 

இயலென்பது எனக்கு  இயல்பாய்  வருமாதலால்

அரசியாக்கினர் ஆசிரியர்.

ஒத்திகை போது என் உச்சரிப்பு சரியாயிருந்தும்

பார்த்தவரை நச்சரித்தது  எது என்று விளங்கவில்லை.

காரணமறியாது பணிநீக்கம் செய்யப்பட்டு

பணிப்பெண்ணாய் ஆக்கப்பட்டேன்.

புது அரசியின் சிம்மாசனத்தின் பின்  நிறுத்தப்பட்டு

சின்னதாய் உணரப்பெற்றேன்.

 

நடுக்கமில்லாத கால்கள் எனக்கு

நடனமாட ஆசை கொண்டேன்

செந்நிறம் கொண்டவர் முன் நிற்க  வேண்டுமாம்

எந்நிறம் கொண்டவர்  பின் நிற்க வேண்டுமாம்

கூறிய ஆசிரியரின் வார்தைகள் கூரிய

அம்பாய்  பாய்ந்தது பதின் பருவத்தில்

 

பெண் கேட்டு வந்தவர் எனை  பார்த்ததும்

பொன் கொஞ்சம் கூட கேட்டனர்

நல்ல மாண்பும் மனமும் இருக்க

துணையாய் பண்பும் படிப்பும் இருக்க

பொன்னெதற்கு புரியவில்லை எனக்கு

பொன்னிறம் இல்லாத குறையை பொன் போட்டு நிறை செய்யவாம்

விளக்கம் கிடைக்க பெற்றேன்.

 

சிறிய சிந்தனைகள்  சிந்தை சிதைக்கும் காலம் போய்

சிரிப்பை தூண்டும் பக்குவத்தை

பகுத்தறிவு கற்று கொடுத்ததால் சிந்தித்து பாக்கிறேன்

"சின்ன கண்கள்  கொண்டு பெரிய உலகம் காண்போருக்கு

பெரிய மனது கொண்டு  சின்னவைகளை  சிந்திக்க தோன்றுவது

என்ன ஒரு மானுடவியல் முரண்  என்று? "

 

நல்ல வேலை கண்ணகி இன்றில்லை

கருப்பாய் இருந்தாலும் அவள் கற்புக்கரசி என்றிருப்பார்கள்

"கற்பிற்கும் கலருண்டோ ?" என்று கலங்கி இருப்பாள் சிலம்பு நாயகி

 

மிருகதோலுரித்து ஆடை அணிந்த போது கூட மனிதன்

மனித தோலை பாகு படுத்த வில்லை.

வரலாற்று பக்க்கங்களை புரட்டி பார்க்கிறேன்

அழகையும் நிறத்தையும்  ஒரு கோட்டில் நிறுத்தம்

உதாரணம் ஒன்று கூட இல்லை.

பின் எங்கு நிகழ்ந்தது பிறழ் ?

பெண் வழி சமூகம் நாகரீங்களுக்கு நடுவில் மாறி போனதாலோ ?

பெண்ணில் வெண்ணிறம் வேண்டும் கண்கள்

ஆண் எண்ணிறமானாலும் ஏற்றுக்கொள்கிறதே !

 

கண்ணா!  கார் முகில் வண்ணா

உனை போற்றும் உலகம்

உன் நிறம்  கொண்ட பெண்டிரை

பண்புடன் ஏற்பதில்லை

திரௌபதி துயர் துடைத்தவனே

துகில் உடலிலிருந்து மட்டுமல்ல

உள்ளத்திலிருந்து உரித்தாலும் துன்பம் என்று அறிவாயா நீ

வருவாயா விரைந்து என் கேள்விக்கு விடை சொல்ல?

 

தாயாக நினைக்கிறேன்  நான்

ஏனோ கரு இல்லாமலே கனக்கிறது என் மார்பு

கருப்பு கண்ணிகை பிறந்தால் மீண்டும் ஒரு இருட்டு பயணமா ?

என்ன ஒரு பிற்போக்கான கேள்வி, கேட்டுக்கொள்கிறேன் என்னையே நான்

எந்நிறம் என்றால் என்ன நெஞ்சுரம் கொண்டவருக்கு

பொருட்டில்லாத பேச்சிற்க்கெதிராய்  போராட்டம் எதற்கு 

என் பாதையில் உன் பாதம் படாமல் பார்த்து கொள்வது

எனை போன்றோரின்   பொறுப்பு 

நீயாய் வந்தவள் நீயாக இரு ! நிமிர்ந்து இரு !

 

No comments: