Wednesday, January 7, 2026

வெள்ள சேல

 தச்சு கிழிஞ்ச சேலையா ? கிழிஞ்சு தச்ச சேலையா ?

சொல்லுற சக்தி சேலைக்கும் இல்ல

சொல்லி ஆக போறது  அவளுக்கும் ஒன்னில்ல

வெடிச்ச  வாயி  ;தடிச்ச வறுமை   

ஒட்டிப்போன வயிறு: கட்டிப்போன கண்ணீரு

ஆல மர வேரா  ? கூரா போனா காலா ?

கொழம்பி நிக்குது பூமி

 

ஓழவு காட்டுல ஓடுன  கம்மாய்க்கும்

தல பாரத்தையும் தளராத அவ பாரத்தையும்

சேத்து சொமந்த  சும்மாடுக்கும்

அடிக்கிற காத்துக்கும்

அவளுக்கு மட்டும் குடுக்காத சாமிக்கும் தான் தெரியும் அவ கத

 

வாக்கப்பட்டு வந்து வருசம் ஒன்னு ஓடி போக

உள்ளுசுரு உருவாக  ஊற வெச்ச பயற

மென்னு தின்ன திண்ணைல ஒக்கார

இடியா  எறங்குது புருசன் எறந்த சேதி

 

ரெண்டாவது உலக போராம்

சண்டகாரன்   போட்ட குண்டு

அவ அண்டத்த  மாத்தி போட்டுச்சு  

 

புடிச்சாலும் இல்லனாலும் மண்ணோட முடியுற பொழப்பிது

நடுவுல ஏன் அந்த மண்ணுக்கு சண்டை போட்டு

மத்தவன்  பொழப்புல மண்ணை போடணும் .

எவனுக்கோ  செவப்பு  சாயம்  புடிக்க   என்  சேலை  வெள்ளையாச்சே 

செயிக்க  போறவனே கேட்டுக்க  , அப்பன்  இல்லாத  என்  புள்ளைக்கு 

என்னைக்குமே  நீ  தோத்தவன்  தான்

பொலம்பிகிட்டே  புள்ள  பெத்தா ,

சித தீ ஆசியோட, சுடுகாட்டுல  புது  உசுரு

புள்ள  பொறந்த  வலி  பெருசா , ? புருசன்  போன  வலி  பெருசா  ? புடி  படல  அவளுக்கு 

 

பொறப்பெடுத்த  உசுர  உருப்படியாக்க 

கெடச்ச  வேலைக்கெல்லாம் போனா 

மனச கல்லாக்குனா ; கல்ல மண்ணாக்குனா

கலையுற எண்ணத்த  களையெடுத்து  கடந்து போனா

கூலியா வந்த கலிய பெத்தது பிச்சு தின்ன

களப்ப  மறந்து களிச்சு  போனா

 

மத்ததுக்கு மூணு வேல

தான் பெத்ததுக்கு ரெண்டு ; ஒண்ணே  ஒன்னு  தனக்கு

எழவு  விழுந்த நா மொதலா அவ போட்ட  புது  கணக்கு

மத்தியானம் பொழப்பு காட்டுல  முடிய

ராவுக்கு  ,கவலையெரிச்சு  கண்ணீருல  ஓல  வெச்சா

கல்லரசியே வெந்து போகும் நெல்லரிசிக்கென்ன

பொங்கி  வெச்ச  பழைய  சோத்துல

நேத்து வெச்ச மோர ஊத்தி 

வைராக்கியத்த   தொட்டு ஊட்டி   வயத்தை  ரொப்பி 

மகன தூங்க  வெப்பா 

காலியான  சட்டியில  ஒட்டியிருக்க பருக்கையோட

பசிய சேத்து  

கரைச்சு  குடிச்சு துக்கத்தோடு தூங்க போனா

 

வருஷம்  பல   ஓடி  போச்சு

புயலொன்னு  வந்து  போனா 

வம்மையான  மரங்கூட  ஒடஞ்சு   போகுமாம்

மெம்மையான  புல்லு  அருகாம   நிக்குமாம்

புல்லா இருந்து  வளத்த  புள்ள  தலையெடுத்துருச்சு

 

அவ கதைய நினைக்க

காஞ்சிபோன கம்மாய்க்கும் கண்ணு கசியுது

ஓஞ்சு போன சும்மாடுக்கும் சொம  கூடுது

காடு கூப்பிட காத்திருக்கு

ஆத்து மேட்டுல உக்காந்து இருந்த ஆத்தாவ மகன் கேட்டான்

கடைசி ஆச இருக்கா ஒனக்கு ?

கொறையா  போன பொழப்புல

நெறைச்சு போற வரைக்கும்

நெறய தேடுன நல்ல மனசு காரி  சொல்லுறா

உங்கப்பன் செத்ததால இத்து போச்சு என் பொழப்பு

என்ன போல இன்னும் எத்தன; இது இன்னும் முடிஞ்சு விடிஞ்ச பாடில்ல

என் கோடி சேலைய கொடையா தாரேன் ;கொடியா தாரேன்

குண்டு போட்டவனுக்கு குடுத்தனுப்பு

ரெண்டு மூணாக வேணாம் ! என் கதி இன்னொருத்திக்கு வேணாம்

                                                                                                -கலை அரசி முருகேசன்

No comments: