Thursday, May 22, 2025

கலியுகத்துப்பரணி

 

திசை அறியா பறவையொன்று

போர் விமான விசையில்  அலறியதில் 

சிதறிய  எச்சத்தின்  மிச்சமாய் மண் சேர்ந்ததொரு  வித்து .

விடியல் காண்பதில்லை புதையாத விதை

போர்க்களத்தில் விடியல் எங்கே விசும்பியது  அது

 

குண்டடி  பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்

மேல் விழ

மண்ணில் புதைந்தது விதை .

போருக்காக போர் செய்தவனோ

சோறுக்காக போர் செய்தவனோ

அறியோம் நாம் ; அவனுதிரம் உதிர

உயிரானது  விதை , உடலானது சதை 

„என்னானானோ“ பதறியது  சுற்றம் 

எண்ணாயிருந்தான் அவன்  அப்போது

இன்னும் எத்தனை எண்களோ ?

 

தகப்பனின் கல்லறை மேல் அரியணை

தனியான தனயனின் குறை தீர்க்க

முரணுக்கு அறம் இல்லை. ..அரணும்  இல்லையா ?

மண்ணுரிமைக்கு  மனித உயிரா ?

கொல்லப்படுவது  மனிதம்  எனில்

வெல்வதெப்படி  வீரமாகும்  ?

எளியோனை சிதைக்கும் வலியோனே

போர் வலியென்று அறிவாயா நீ

கொன்று வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்

ஆவிகளுக்கு அரசனாக எண்ணமா ?

கணக்கிலடங்கா சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள் 

களத்தில் இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்

நடந்தவை குற்றமா இல்லையா என்று.

வெள்ளையான மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா  என்ன ?

விழித்தெழு ; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.

ஜெயம்கொண்டாரே பயம் கொள்ளும் கொடுமைகள்

இனி நடவாமல் இருக்கட்டும்.

போர் துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்

தரணியது  புது  பரணி  பாடும்  உனக்கு

 

„எய்தவன் அறியா அம்பானோம் நீயும் நானும்“

மலரான வித்து ஆறுதலாய் சேதிசொன்னது  செத்தவனுக்கு  .

இறப்பிற்கு அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா

தான் வந்த திசை தவறானதென்று  , வித்திட்ட பறவை விம்மியது.