Monday, October 26, 2020

போதியின் கீழ் பேதையவள் ..

 

எழும் அலை எல்லாம்

கரை காண்பதில்லை

கரை காணும் அலையாவும்

கதை கேட்பதில்லை

 

விழும் மழை எல்லாம்

நிலம் சேர்வதில்லை

நிலம் சேரும் நீரெல்லாம்

வேர் நனைப்பதில்லை

 

துளிர்க்கும் மொட்டெல்லாம்

மலர்ந்து மகிழ்வதில்லை

மலரும் மலரெல்லாம்

மகரந்தம் தருவதில்லை

 

சிந்தும் கண்ணீர் எல்லாம்

சோகம்  கரைப்பதில்லை

கரைந்த சோகம் எல்லாம்

மறைந்து போவது இல்லை

 

கற்பனைக்கெட்டியது எல்லாம்

கலையாவதில்லை

கலையானவை எல்லாம்

நிலை கொள்வதில்லை

 

உதிர்ந்த உதிரம் எல்லாம்

உயிராய் உறைவதில்லை

உறைந்த உயிரெல்லாம்

கருவில் உரு பெறுவதில்லை

வேட்கை கொண்டதெல்லாம்

வாழ்க்கை ஆவதில்லை

நினைத்தவை எல்லாம்

நிறைவேறுவதில்லை

 

பொருளொன்று இல்லாது

படைப்பொன்று கிடையாது

நோக்கமன்று  இல்லாது

நிகழ்வொன்று நடவாது

 

மெய்யதை  உணராது

பொய்யான தேடல் ஏன்

எச்சமயமும் மரணமென்ற

நிச்சயமற்ற இப்பயணத்தில்

 

இலக்கென்பது பொய்

இன்றென்பதே மெய்

No comments: