அலை கடல் கதை சொல்லும் ஊரில்
கவிதை சொல்ல பிறந்ததொரு பேரலை
கடலலை சீற்றம் கொண்டால்
அழிவொன்றே எஞ்சி இருக்கும்
தமிழலை சீற்றம் கொண்டால்
ஆக்கமொன்றே விஞ்சி நிற்கும்
ஆக்கத்தின் தாக்கம் ! ஆம் !
பழைய புதுவை புதிதானது
திராவிட திரவம் சிந்த சிந்த
சுயமரியாதை தீபம் சுடர் விட்டது
சுப்பிரமணியன் வைத்த புரட்சி புள்ளிகள்
சுப்புரத்தினத்தின் கோலத்திற்கு வடிவம் தந்தன
முண்டாசுக்கும் முறுக்கு மீசைக்கும்
தாசனானவன் தசாப்தங்கள் கடந்து
பேசும் காவியங்கள் படைக்க
சமுதாய (அ)நியாயங்கள் சாய்ந்தன .
அவன் சிந்தனை ஊற்றெடுக்க எடுக்க
அச்சேரியவை கவிதைகள் அல்ல
அரங்கேறியது சுயமரியாதை கச்சேரி
வாள் கொண்டல்ல (எழுது) கோல் கொண்டு
முற்காட்டில் முற்போக்கு மரம் நாட்டவன்
சாதி சதிராடிய காலத்தில்
அதன் சலங்கையைப்பிய்த்தெறிந்தவன்
மண்ணில் ஏற்ற தாழ்வு இயற்கை
மானுடத்தில் அது செயற்கை
என்று அறைந்து சொன்னவன் .
அச்சு கொண்டு அநீதி செய்த
நச்சு நாகங்களை நசுக்கி கொன்றவன்
பழைய சித்தாந்தங்களில் பூட்டி கிடந்த சிந்தையை
பகுத்தறிவு பட்டறையில் சாவி வாங்கி மீட்டெடுத்தவன்
சின்ன மீசை வைத்த பெரு சிந்தனையாளன்
என்னிந்தனை ஆயினும் எண்ணில் கொள்ளாதவன்
பஞ்சமில்லாத நெஞ்சுரம் கொண்டவன்
அச்சமதனை துச்சமாய் எண்ணியவன்
சமயம் பார்க்கும் நீதியை சாடியவன்
சமநீதி சொல்ல சமயம் தேடாதவன்
அமுதென்று அழைத்தான் தமிழை
சங்கெடுத்து முழங்க செய்தான் அதன் புகழை
பாவேந்தன் பாடிய பண்ணும்
அப்பண் ஏந்திய பொருளும்
தமிழ் வாழும் வரை வாழும்
தமிழுக்கு அழிவில்லையாம் ! அவனுக்கும் தான்
அலைகள் ஓய்வதில்லை ! பேரலை பற்றி சொல்ல வேண்டுமா ?
- கலை அரசி முருகேசன்