Thursday, July 8, 2021

வாழ்வியல் சொல்லும் விழாக்கள்

 

கொளுத்தும் வெயிலில் கோடை மழை போல

வற்றி போன குளத்தில் ஒற்றை தாமரை போல

இறுக்கமான சூழலில் அமைந்த இந்த கவி அரங்கின் மூலம்

 

நைந்து கிடக்கும் நம்பிக்கை நறும்புகளில்

நற்றமிழ் பாய்ச்சி புத்துயிர் தருவோம்

களைத்து கிடக்கும் இதய நாளங்களை

கவிதை சொல்லி இளைப்பாற அழைப்போம் .

 

தாளும் கோலும் களவி கொண்டதால்

பிறந்த என் கவிதை குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா

---------------------

 

இயல் இசை நாடகம் - முத்தமிழை போற்றும் எம்

விழாக்களை பற்றி எத்தனை முறை சொன்னாலும் தெவிட்டாது .

 

சந்தோஷத்திற்கு விழா சங்கடத்துக்கு விழா

பக்திக்கு விழா பயத்துக்கும் விழா

உழவுக்கு விழா எழவுக்கும் விழா

சாமிக்கு விழா சவத்துக்கும் விழா

நாங்கள் வித விதமாய் விழா  வித்தை அது

விடிய விடிய சொன்னாலும் முடியாது

 

 கத்திரி வெயில் சித்திரையோடு முடிய

 வரமொன்று  வழங்க வைகாசி விடிய

 விசாகம் வந்தது விஷேஷமல்ல

 அழகான வேலவன் , தமிழ்க்குடியின் மூலவன்

 முருகனவன் பிறந்தது முத்தாய்ப்பானது

 வீரவேலவனை போற்றும் விஷேஷ விழா , விசாக திருவிழா

 

விண்ணில் முட்டிக்கொண்ட மேகங்கள்

மண்ணில் இட்டுக்கட்டி மெட்டு போட

விதைத்த நிலம் விளைந்து நிற்க

உழைத்த களைப்பு களைந்து போக

கண்டாங்கி சேலையும் கண்ணாடி வளவியும்

கும்மிக்கும் குலவிக்கும் ஒன்று கூடி

இல்லாத அடுப்பை கல்லால் கூட்டி ,

உலை கொதிக்க

கலை கட்டும் எங்கள் உழவுதிருவிழா

 

வேலிக்குள் ஜல்லிக்கட்டு காளையது  சீறி பாய்ந்து தேகம் கிழிக்க

வேல் விழியாள் வெளியில் இருந்து அதை சேர்த்து தைக்க

அடங்க மறுப்பது காளையா ? என் காதலா ?

தைப்பது நீ என்றால் நான் சல்லி சல்லியாய்

போகும் வரை தொடரட்டும் இந்த ஜல்லி கட்டு

ஏங்கும் எங்கள் காளையரின் வீரத்தையும்

காளைகளின் வீரியத்தையும் சொல்லும்

இந்த மாட்டு விழா எங்கள் வீட்டு விழா

 

 

மழையால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர

அகநானூறு போற்றும் அகல் விழா

இன்றும் வழக்கில் இருக்கும் விளக்கு  விழா

என்ன தான் தேய்த்து தீர்த்தாலும்

சட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும்

கெட்டியான  மீன் வாசம் போல ,

வீறு கொண்டு  எழுந்த கார் மேகம் எல்லாம்

ஒன்று கூடி ஒப்பாரி வைத்து சோதித்தாலும்

சாதித்து நிற்கும் இந்த  கார்த்திகை ஜோதிகள்

 

ஈராறு மாதங்களை  மட்டுமல்ல

ஊராரும் உறவாறும் சேர்ந்து

உறவின் வரவை , வரவின்  உறவை

பிரிவில் துணிவை, துணிவின் பிரிவை

அழுத்திச்சொல்லும்

அறைந்து சொல்லும்

 அர்த்தமுள்ள விழாக்கள் , எங்கள் குடும்ப விழாக்கள் 

 

பூப்படைந்த புது மகளுக்கு

மாமன் நடத்தும் மஞ்சள் விழா

ஊரும் உறவும் ஒன்று கூடும்

திருமணம் என்னும் பெருவிழா

எத்துனை  துயரிலும்

புத்துயிரொன்றை பத்து திங்கள்

சுமப்பவளுக்கு சீமந்த விழா

ஓட்டை போட்டால் நிரம்பும்

குடமுண்டோ

தமையனின் மடியில் அமர்ந்த

தனயனின் காதுகள் துளைக்க

நிரம்பும் பெற்றவளின்  உள்ள குடம்.

காதணி விழாவிற்கு இம்மேதினியில் ஈடுண்டோ

அழகென்ற சொல்லுக்கு முருகன், அறிவோம் நாம்

அமைதி என்ற சொல்லுக்குum முகமுண்டு என்பேன் நான்

பாதியில் மாறிய பாதை ,போதியில் முடிய

பாருக்கு புது பாடம் சொன்னவன் புத்தன்.

அக்கருணை முகத்தை ஓரப்பார்வை

பார்த்தாலும் ஒட்டிக்கொள்ளும் அமைதி

புத்தர் பிறந்த வைகாசி

இத்துயருக்கு முடிவாய் இருக்கட்டும்

 

இறுதியாய்

உள்ள பள்ளங்களை உவகையால்

நிரப்பும் விழாக்கள் பழகுவோம்

சாதி மறந்து சமத்துவம் பழகும் விழாக்கள்

மதம் மறந்து மனிதம் பழகும் விழாக்கள்

பிரிவினை மறந்து பரிவினை பழகும் விழாக்கள்

 

மனிதம் என்னும் மையால் ,  எண்ண தூரிகை வண்ணம் கொண்டால்

வாழ்க்கை காகிதம் வானவில் ஆகும் ... இந்நாள் போல் ...எந்நாளும் திருவிழா காணும்

 

வாய்ப்பு நல்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி !

Monday, October 26, 2020

போதியின் கீழ் பேதையவள் ..

 

எழும் அலை எல்லாம்

கரை காண்பதில்லை

கரை காணும் அலையாவும்

கதை கேட்பதில்லை

 

விழும் மழை எல்லாம்

நிலம் சேர்வதில்லை

நிலம் சேரும் நீரெல்லாம்

வேர் நனைப்பதில்லை

 

துளிர்க்கும் மொட்டெல்லாம்

மலர்ந்து மகிழ்வதில்லை

மலரும் மலரெல்லாம்

மகரந்தம் தருவதில்லை

 

சிந்தும் கண்ணீர் எல்லாம்

சோகம்  கரைப்பதில்லை

கரைந்த சோகம் எல்லாம்

மறைந்து போவது இல்லை

 

கற்பனைக்கெட்டியது எல்லாம்

கலையாவதில்லை

கலையானவை எல்லாம்

நிலை கொள்வதில்லை

 

உதிர்ந்த உதிரம் எல்லாம்

உயிராய் உறைவதில்லை

உறைந்த உயிரெல்லாம்

கருவில் உரு பெறுவதில்லை

வேட்கை கொண்டதெல்லாம்

வாழ்க்கை ஆவதில்லை

நினைத்தவை எல்லாம்

நிறைவேறுவதில்லை

 

பொருளொன்று இல்லாது

படைப்பொன்று கிடையாது

நோக்கமன்று  இல்லாது

நிகழ்வொன்று நடவாது

 

மெய்யதை  உணராது

பொய்யான தேடல் ஏன்

எச்சமயமும் மரணமென்ற

நிச்சயமற்ற இப்பயணத்தில்

 

இலக்கென்பது பொய்

இன்றென்பதே மெய்

Tuesday, October 20, 2020

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே…… வளர் பிறையே

புல் வெளியே…….  வெண் பனி மழையே

 

இயங்கிய காலம் உறங்கி கிடந்து

மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து ....

இருக்கும் போது மறந்த உண்மை

இறக்கும் போது உணர பெற்ற

 

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

 

கருப்பை விடுத்த நொடி முதல்

இருப்பை தேடி திரியும் உலகில்

 

தவழ்ந்து துவண்டு

எழுந்திட தவிப்பு

 

நின்று வென்றதும் 

நடந்திட தவிப்பு

 

ஓரடி  வைத்ததும்

ஓடியாட தவிப்பு

 

மூப்பது தொடங்கும்  வரை 

தவிப்புகள்  முடியவில்லை

 

முடிவொன்று இருப்பதை மறந்து

முடிவில்லா ஆசைகள் கொண்ட என்  (கதை……)

 

சுமந்த மடியில் ,விழுந்த நொடி முதல்

வென்றிட முயன்றேன்

 

மழலையாய் அழுகை கொண்டு

பசியை வெல்ல

 

மூவாரில் காமம்   கொண்டு

காதல்  வெல்ல

 

முதுமையில் பொறுமை கொண்டு

வெறுமை வெல்ல

 

வென்று முடிக்கும் வேகத்தில்

கொன்று புதைத்தேன் வாழ்வதனை

 

புனைந்த பொருளுரை பொருளற்று போனதை

மூப்பில் முடிவுரை வரையும் போது உணர பெற்ற (கதை ……)


தண்ணிய தேடுற தரிசு நெலம்

 

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு

முன்னோரின் கலைய சொத்தா  பாக்குற ஊரு

வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு 

ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல  கலந்த ஊரு.

 

 தித்திக்கும்  தமிழ் பேசுற தென்னாடு ;

 நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு

 

காதல கதையா, களவிய கவிதையா

வீரத்த நாடகமா ,வெற்றிய ஆட்டமா

நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம்.

 

சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு

உழவுக்கு ஆட்டம்  எழவுக்கும் ஆட்டம்

துக்கத்துக்கு பாட்டு,  தூக்கத்துக்கும்  பாட்டு

சாமிக்கு ஆட்டம் , சவத்துக்கும் ஆட்டம்.

பக்திக்கு  ஆட்டம்,  பயத்துக்கும் ஆட்டம்

வித விதமா  கலை பழகும்  வித்தையது

விடிய விடிய சொன்னாலும் முடியாது


மண்ணுல  விதைச்சது 

பொன்னாக வெளைஞ்சு நிக்க 

கண்ணுல வரும் சந்தோசத்த

கூத்தாடி கொண்டாடும்  கூட்டம்

 

மெய்யெல்லாம் சிலிர்க்க வெக்கும்

கட்டையில ஏறி நாங்க ஆடுற  பொய் கால் குதிரையாட்டம்

 அழகான கொடத்தை அலுங்காம தலையில  வெச்சு

எழிலாக அசஞ்சு வந்தா கரகாட்டம்

 மஞ்ச கருப்பு பட்ட போட்டு நாங்க ஆடும் புலியாட்டம்

பாஞ்சு வரும் புலிய கூட பக்குவமா  பதுங்க செய்யும்

 

வீராதி வீரன் கதையெல்லாம்

சொல்லோடு சுதி சேத்து, வில்லுல தட்டி பாட

சோறு தண்ணி மறந்து போகும் ; சோகம் எல்லாம் ஓடி போகும்

 

 தப்பு தப்பா இல்லாம தாளத்தோட

தப்பாம ஆட வெக்கும் தப்பாட்டம்

 ஒத்த கோலு  சுத்தி வந்து வீரம் சொன்னா சிலம்பாட்டம்

ரெட்டை கோலு தட்டி சந்தோசத்த சொன்னா கோலாட்டம்

 

மனுசங்க ஆடுற ஆட்டம் எல்லாம் பத்தாதுன்னு

மாடாட்டம் ஆடுவோம்; மயிலாட்டம் ஆடுவோம்

 

வட்டமா ஒன்னு கூடி  வகையா கை தட்டி

பெட்டையெல்லாம் ஆடிவர 

கூடி போகும் கூட்டம் எங்க கும்மியாட்டம் பாக்க

 

தடையில்லா  பாதையில, தளராத பயணத்துல

நடந்து போகையில, நறுக்குன்னு முள்ளு குத்துனது போல,

நேத்து வந்த கூத்தெல்லாம் வெனையா வந்து சேர

பாத்து பாத்து வளத்த கலையெல்லாம் காத்துல காணாம போவுது.

பாட்டா கூத்தா பொழப்ப சொன்ன கூட்டத்தின்

பொழப்பின்னைக்கி   பெரிய  கூத்தாகி போச்சு .

வண்ணம் பூசி எண்ணம் சொன்னவுக  

கண்ணெல்லாம் வத்தாத கொளமாகி போச்சு.


வண்ண வண்ணமா இருந்தாலும் வாடாமல்லிக்கு வாசமில்ல

மனுச பொழப்ப சொல்லும் கலைக்கு ஈடு இணை எதுவுமில்ல

மண்ணு வாசம் பேசுறவுக பொழுப்புல மண்ணு விழாம

மகத்தான வரலாறு மரிச்சு போகாம 

நட்டு வெச்ச செடி பட்டு போகாம பாக்குறது போல

நம்ம   நாட்டுப்புற கலைய காக்க நல்லதா ஒரு முடிவெடுப்போம் .