Thursday, May 22, 2025

கலியுகத்துப்பரணி

 

திசை அறியா பறவையொன்று

போர் விமான விசையில்  அலறியதில் 

சிதறிய  எச்சத்தின்  மிச்சமாய் மண் சேர்ந்ததொரு  வித்து .

விடியல் காண்பதில்லை புதையாத விதை

போர்க்களத்தில் விடியல் எங்கே விசும்பியது  அது

 

குண்டடி  பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்

மேல் விழ

மண்ணில் புதைந்தது விதை .

போருக்காக போர் செய்தவனோ

சோறுக்காக போர் செய்தவனோ

அறியோம் நாம் ; அவனுதிரம் உதிர

உயிரானது  விதை , உடலானது சதை 

„என்னானானோ“ பதறியது  சுற்றம் 

எண்ணாயிருந்தான் அவன்  அப்போது

இன்னும் எத்தனை எண்களோ ?

 

தகப்பனின் கல்லறை மேல் அரியணை

தனியான தனயனின் குறை தீர்க்க

முரணுக்கு அறம் இல்லை. ..அரணும்  இல்லையா ?

மண்ணுரிமைக்கு  மனித உயிரா ?

கொல்லப்படுவது  மனிதம்  எனில்

வெல்வதெப்படி  வீரமாகும்  ?

எளியோனை சிதைக்கும் வலியோனே

போர் வலியென்று அறிவாயா நீ

கொன்று வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்

ஆவிகளுக்கு அரசனாக எண்ணமா ?

கணக்கிலடங்கா சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள் 

களத்தில் இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்

நடந்தவை குற்றமா இல்லையா என்று.

வெள்ளையான மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா  என்ன ?

விழித்தெழு ; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.

ஜெயம்கொண்டாரே பயம் கொள்ளும் கொடுமைகள்

இனி நடவாமல் இருக்கட்டும்.

போர் துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்

தரணியது  புது  பரணி  பாடும்  உனக்கு

 

„எய்தவன் அறியா அம்பானோம் நீயும் நானும்“

மலரான வித்து ஆறுதலாய் சேதிசொன்னது  செத்தவனுக்கு  .

இறப்பிற்கு அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா

தான் வந்த திசை தவறானதென்று  , வித்திட்ட பறவை விம்மியது.

Wednesday, February 26, 2025

சிறகின் பாரம் இறகுக்கு

 சல்லி சல்லியாய் உடைந்து கொண்டிருக்கிறேன்

என்னை என்னிடமே இழந்து கொண்டிருக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்! மறைந்து கொள்கிறேன் !

திரும்ப கிடைக்காத இடத்தில கொடுத்தது வைத்தது யார் தவறு 

திரும்ப தருகிறேன் என்று யாரும் சொல்ல வில்லை 

இருந்தாலும் கொடுத்தேன் சற்றே அளவுக்கு அதிகமாய் 

கொடுத்து விட்டதை எண்ணி கலங்குகிறேனா ...

ஏதும் கொடுக்கப்படவில்லை என வருந்துகிறேனா

எதிர்பார்ப்புகள் இல்லாத உறவும்  இயலுமா 

எல்லாமிருக்கிறது என்னிடம் என்னை தவிர 

பேச முயல்கிறேன் ,சொல் எழவில்லை

அழ தவிக்கிறேன், கண்ணீர்  துளிர்க்கவில்லை 

ஒன்றாய் சேர்த்து கொட்டி அழுது விட்டால் முடிந்து விடுமா ?

முடிய வேண்டுமா ? 

துயரை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறேன் !

துயர் இறந்தால் நானும் இறந்து விடுவேனோ ? அறியேன் நான் 

முகவரி இல்லாத கடிதம்

 

பதின்பருவத்தில் சிதறிய சின்ன  பொறி

விளையாட்டாய் தொடங்கிய விதி

விதியாய் தொடரும் விளையாட்டு

வேண்டுமென்று துவங்கவில்லை

எனினும்  வேண்டாமென்று தோன்றவில்லை

ஒரு நாடகத்தில் இரு வேடம் எனக்கு ,

வேடங்கள் விளக்கி  விட்டால் வேடம் கலைந்து விடும்

கலையாதிருப்பது கதைக்கு நல்லது

 

தவறும் சரியும் அறியாமல் இல்லை

தவறென்று தெரிந்தும், சரி செய்ய எண்ணவில்லை

தவறை சரியாய் செய்யவே தவித்தது மனம் 

வயதோ என்றெண்ணினேன்

„சரியும் தவறும், அறியா வயதில்

அததன் இடத்தில அமர்வதில்லை

16 வயது சொல்லும் பல தத்துவங்களில் இதுவும் ஒன்று

 

இடையில் இடைவெளிகளுடன்

வருடங்கள் பல கழிந்தாலும்  

ஈர்ப்பின் ஈரம் வற்றியதாய் தோன்றவில்லை

முதிர்ச்சி தவறை தவிர்க்குமோ

சிந்தித்து பார்த்தேன்  ; சிந்தை சொன்னது

தவறென்று நினைத்ததே தவறோ

பெயரில்லாத உறவில் தவறென்ன  ;பொருள் இருக்க

திசை இல்லாத பயணத்தில்   தவறென்ன ; பாதை இருக்க

நீயில்லாத உறவில் தவறென்ன ; நானிருக்க

நானாய் நானிருக்கும் வரை

நீயாராய் இருந்தாலும் கவலையில்லை எனக்கு

 

என் கண்ணீர்,  நீ கவிதை நீ

என் புன்னகை நீ , புளிங்காகிதம் நீ

என்னிலிருக்கும் உன்னை நீ அறிய போவதில்லை

அது எனக்கு அவசியமும் இல்லை

 

சில நேரங்களில் நிஜமாகவும்

பல  நேரங்களில் நினைவாகவும் 

உறவு பழகும் கலை

காலப்போக்கில் கற்றுக்கொண்டேன் !